கட்டுக்கதைகளையும் பொய்ப் பரப்புரைகளையும் முறியடிப்போம்.
……………………………………………………………
இந்திய ஊடகங்கள் புல்வாமா தாக்குதலை எவ்வாறு கையாண்டன என்பது பற்றி, லிசனிங் போஸ்ட் செய்தி நிறுவனம் ஓர் ஆவணப்படம் வெளியிட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு எப்படி பெரும்பாலான இந்திய ஊடகங்கள் தேசப்பற்று என்ற போர்வையில், வெறுப்பரசியலைப் பரப்பின என்றும், நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் இந்துத்துவ அரசியலுக்கு அவை எப்படித் துணை நிற்கின்றன என்றும் இந்த ஆவணப் படம் ஆராய்கிறது.
நம் ஊடகங்களின் தொகுப்பாளர்களின் இச்செயல்பாடுகளை இதழியல் தர்மத்துக்குப் புறம்பான ஒரு காட்டுக்கூச்சல் என்கிறார் லிசனிங் போஸ்டின் செய்தியாளர் ரிச்சர்ட் கிஸ்பர்ட்.
24 மணிநேர செய்தி தொலைக்காட்சிகள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் உள்ளன. ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள், பிராந்திய ஊடகங்கள் என 400க்கும் அதிகமான செய்தித் தொலைக்காட்சிகள் இங்குள்ளன. ஆகையால், இந்த செய்தி ஊடகங்களின் தொகுப்பாளர்கள் பொதுப்புத்தியைக் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். தேர்தல் நெருங்குவதால் இந்த ஊடகங்கள், பொதுப்புத்தியை இந்துத்துவ அரசியலுக்கேற்ப கட்டமைக்கின்றன .
தொலைக்காட்சி செய்தி ஊடகங்களின் இந்த பரப்புரை, இணையம் வழியாக மக்களின் செல்பேசிக்குள் புகுத்தப்படும்போது, இதன் விளைவுகள் பன்மடங்காக இருப்பதாக இந்த ஆவணப்படம் நிறுவுகிறது.
இதில் பேசியுள்ள சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தின் பேராசியர் ரோஹித் சோப்ரா, பாஜக எவ்வாறு இணையத்தையும், சமூக வலைத்தளங்களையும் தங்களுடைய பரப்புரைகளை பொதுபுத்திக்குள் புகுத்துவதற்கு பயன்படுத்துகிறது என்பதை விளக்குகிறார்.
சமூக வலைத்தளங்களில், பாஜக திட்டமிட்டு இஸ்லாமியர்கள் எல்லாம் அந்நியர்கள், காங்கிரஸ் ஒரு வலுவிழந்த கட்சி, தாராளவாதிகள் எல்லாம் தேச விரோதிகள் என்ற கருத்தை ஒரு பக்கம் பரவவிட்டு, மறுமுனையில் தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டுமென்றால் மோடிக்கு வாக்களியுங்கள் என்ற பரப்புரையை செய்வதாகவும் இந்த ஆவணப்படத்தில் சொல்லப்படுவதாக இணையதளம் ஒன்றில் விரிவான கட்டுரை ஒன்று வந்துள்ளது.
அது இப்பொழுது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது .
காசுமீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டவுடன் புல்வாமா தாக்குதலை விட பல மடங்கு பொய்க் செய்திகளையும் , கட்டுக்கதைகளையும் இங்குள்ள இதழ்களும் / ஊடகங்களும் தொடர்ச்சியாகப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக காஷ்மீரின் உண்மை வரலாற்றை / ஒடுக்குமுறையை / போராட்டத்தை மறைத்து இந்துத்துவக் கண்ணோட்டத்தில் இவர்கள் ஒரு வரலாற்றைக் கட்டமைக்க முயற்சியெடுக்கிறார்கள். எனவே , அவர்களின் கட்டுக்கதைகளையும் அவற்றின் உண்மைத்தன்மையையும் கீழே பார்க்கலாம்.
கட்டுக்கதை – 1
காஷ்மீரில் இதற்கு முன்னர் மூவர்ண இந்திய தேசிய கொடியை பறக்கவிட முடியாது / பறந்ததில்லை
உண்மை : காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்ட காலந்தொட்டு ஜம்மு & காஷ்மீரின் மாநில அரசின் கட்டடங்களிலும், நிகழ்வுகளிலும் அம்மாநிலத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள கொடி பறக்கவிடப்பட்டிருக்கும் , அதனோடு இந்திய தேசியக் கொடியும் பறந்து கொண்டு தான் இருக்கிறது.
ஆனால், தற்போது அரசமைப்பு சட்டப்பிரிவு 370இன்படி ஜம்மு & காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதால், இனி இந்திய நாட்டின் கொடி மட்டுமே அங்கு பறக்கக் கூடிய சூழல் உருவாகி உள்ளது.
ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்புரிமை கொடுக்கப்பட்டு வந்தபோதிலும், அங்கு இந்திய தேசிய கொடியை அவமதிப்பது, நாட்டின் ஏனைய மாநிலங்களை போன்று சட்டரீதியாக தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.
கட்டுக் கதை 2 :
ஜம்மு & காஷ்மீருக்கு தனியே அரசமைப்பு சட்டம் இருந்தது. அங்கு இந்தியாவின் சட்டவிதிகள் அமல்படுத்தப்படவில்லை.
உண்மை : இந்திய அரசுக்கு அதிகாரம் இல்லாமலா காஷ்மீரை மூன்றாகப் பிரிக்கும் அறிவிப்பை உள்துறை அமைச்சர் கொடுக்க முடிகிறது. அந்த அறிவிப்பைக் கொடுப்பதற்கு முன்பாக அங்கு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த முடிகிறது. எல்லாம் கட்டுக்கதை.
இப்படி சொல்வதன் மூலமாக இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட காஷ்மீர் இந்திய அரசியல் சட்டத்திற்கு பொருந்தாமல் தன் விருப்பத்திற்கு செயல்பட்டது போலவும் அவர்களைக் கட்டுப்படுத்த தான் இப்பொழுது சட்டவிதிகளை அமல்படுத்துவது போலவும் ஒரு பிம்பத்தை காட்டவே இப்படி ஒரு கட்டுக்கதை பரப்பப்படுகிறது
இந்திய அரசின் மூலம் உருவாக்கப்படும் புதிய சட்டங்கள் எதையும் விரும்பாத பட்சத்தில், அதை நிராகரிக்கும் உரிமையை ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்பு சட்டப்பிரிவு 370 வழங்கியது உண்மை தான் .
ஆனால், இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்த பிறகு, தாங்கள் கொடுத்த வாக்குறுதியை கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அரசு திரும்பப் பெற்று விட்டது.
நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்ட பல்வேறு புதிய சட்டங்கள், குடியரசுத் தலைவரின் ஆணையின் மூலம், அரசமைப்பு சட்டப்பிரிவு 370இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஜம்மு & காஷ்மீரிலும் அமல்படுத்தப்பட்டு வந்துள்ளது.
உதாரணமாக, மத்திய புலனாய்வு அமைப்பு, தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா போன்றவை நாட்டின் மற்ற பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திலும் அதன் சட்டப்பேரவையின் அனுமதியுடன் அமலுக்கு வந்தன.
ஆளுநர் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டம் ஜம்மு காஷ்மீரத்தில் எந்த ஒரு பகுதியையும் கலவரப் பகுதியாக அரசு அறிவித்து அதை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
1986 க்குள் 42 அரசியல் சட்டத் திருத்தங்கள் இயற்றப்பட்டன. இன்றைய நிலைமை என்னவெனில் இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள 395 பிரிவுகளில் 260 பிரிவுகள் ஜம்மு-காஷ்மீருக்கு பொருந்தும் .
மீதமுள்ள 155 பிரிவுகள் மீதான உரிமை மட்டுமே மாநிலத்திடம் உள்ளது இந்த உரிமையும் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களின் அரசியல் சட்டத்திலும் உள்ளன.
தற்போது ஜம்மு & காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதால், இனி இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து சட்டங்களும் உடனடியாக ஜம்மு & காஷ்மீரிலும் நடைமுறைக்கு வரும்.
இதற்கு முன்னர் இந்தியாவின் மற்ற பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு, ஜம்மு & காஷ்மீரில் ஏற்றுக்கொள்ளப்படாத சட்டங்கள் இனி அமலுக்கு வரும்.
(தொடர்வோம்)
29-08-2021