மோடியை எதிர்கொள்வது எப்படி ? – 4
க.இரா.தமிழரசன்
மோடி எப்படி”இந்துத்துவ வெறியை” ஏற்றி விட்டு இரண்டாம் கட்டத் தேர்தலை எப்படி எதிர்கொண்டார் என்று பார்த்தோம். முதல் கட்டத் தேர்தலுக்கு முன்பாக அவர் என்ன செய்தார் தெரியுமா?
“ஒரே நாடு ஒரே வரி” என்று பேசி ஜி.எஸ்.டி. யை 2-சூலை 2017 அன்று இந்தியா முழுவதும் பா.ஜ.க. அமுல்படுத்தியது.
5 முதல் 28 விழுக்காடு வரை பொருட்களுக்கான வரி நிர்ணயித்தது.
பா.ஜ.க. அமல்படுத்திய ஜி.எஸ்.டி யால் உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் .சிறு, குறு, நடுத்தர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
மாநிலங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதோடு வரி வருவாயும் தடுக்கப்படுக்கிறது என்று பொருளாதார அறிஞர்களும், அரசியல் நோக்கர்களும் எதிர்த்தனர்.
உலகில் ஜி.எஸ்.டி.வரியை நடைமுறைபடுத்தி வரும் 140க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியாவில் மட்டும் தான் அதிகபட்சமாக 28 விழுக்காடு வரியை மோடி அரசு திணித்தது.
28 விழுக்காடு வரி மிகவும் அதிகமானது என்று இந்தியா முழுக்க பல்வேறு துறை சார்ந்த இலட்சக்கணக்கான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதற்கெல்லாம் கொஞ்சம் கூட இறங்கி வரவில்லை.மோடியின் சொந்த மாநிலமான குசராத்தில் ஜி.எஸ்.டி.க்கு எதிரான போராட்டம் மிகப் பெருமளவு வெடிக்கத் தொடங்கியவுடன் மோடி அரசு பின் வாங்கியது.
இன்னும் இரண்டொரு மாதங்களில் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்ததால்
மோடி அரசுக்கு நெருக்கடி அதிகமாகியது. 22 ஆண்டு கால சாம்ராஜ்யம் சரிந்து விடுமோ என்று அஞ்சத் தொடங்கியது.
தேர்தல் ஆணையம் குசராத் தேர்தல் தேதி அறிவித்த 10 நாட்களில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தைக் கூட்டிய அருண் ஜெட்லி 28 விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருந்த 227 பொருட்களில் 177 பொருட்களின் வரியை குறைப்பது என முடிவு செய்தார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டது குசராத் மாநிலம் தான்.
குசராத் மாநிலத்தில் வர்த்தகம் செய்யும் மார்வாடி, படேல், தாக்கூர் சமுகத்தினரும், சிறு, குறுந்தொழில் செய்யும் பிரிவினரும் அதிகமாக உள்ளனர். இவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
அவசர காலத்தில் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் குசராத் மாநிலத்தில் ஜவுளித் தொழில், பட்டு நெசவு தொழில், கட்டுமானம், நூற் பாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதனால் வணிகர்கள், சிறு ,குறு தொழில் செய்பவர்கள் மோடி அரசுக்கு மிகப் பெரும் போரட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக பா.ஜ.க மற்றும் மோடியின் செல்வாக்கு குறையத் தொடங்கியது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏ.பி.பி, சி.எஸ்.பி.எஸ் நடத்திய கருத்துக் கணிப்பில்” பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கட்சிக்கும் இடையே 30 விழுக்காடு வித்தியாசம் இருந்தது. ஆகஸ்ட் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் பா.ஜ.க.வுக்கு 144 முதல் 155 இடங்கள் வரை கிடைக்கும்” என்று கூறியது.
அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பா.ஜ.க.வுக்கு சறுக்கல் ஏற்பட்டு 113 முதல் 121 இடங்கள் வரையிலும், காங்கிரஸ் கட்சிக்கு 70 முதல் 80 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறியது.
ஏற்கனவே படேல் சமுகத்தினர் ஹர்திக் பட்டேல் தலைமையில் தனக்கு எதிராக இருப்பதை உணர்ந்து கொண்டது பா.ஜ.க. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த கருத்துக் கணிப்பில் படேல் சமூகத்திரைில் 58 விழுக்காடு போர் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருந்தனர். அந்த ஆதரவு கொஞ்சம் கொஞ்சம்மாக குறையத் குறைய தொடங்கியதை உணர்ந்ததால் தான் பா.ஜ.க. ஜி.எஸ்.டி. கவுன்சிலைக் கூட்டி தடாலடியாக வரியைக் குறைத்தது.
குறிப்பாக ஜவுளி மற்றும் ஜவுளிப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை 18% லிருந்து வெறும் 5% ஆக குறைத்தார்கள். இதன் மூலம் இழந்து கொண்டிருக்கும் தங்கள் செல்வாக்கை வணிகர்கள் மத்தியில் உயர்த்த முடியும் என்று நம்பினார்கள்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் வரி கணக்கு தாக்கல் செய்வதில்லையென்றால் ஒரு நாளைக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தாங்கள் கட்ட வேண்டிய வரியை விட அபராதத் தொகை அதிகமாக இருந்ததால் வணிகர்கள் அபராதத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வந்தனர் இந்நிலையில் அந்த அபராதத்தை ஆகஸ்ட் மட்டும் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளுபடி செய்தனர்.
இதன் மூலம் அகமதாபாத் மற்றும் சூரத், ராஜ்கோட்பகுதிகளில் தங்கள் செல்லாக்கை அதிகரிக்க முடியும் என்று நம்பினார்கள்.
அதே போல் “படேல் ” சமுகத்தவர்கள் ஹர்த்திக் படேல் தலைமையில் காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பதை உடைப்பதற்காக மிகவும் கீழ்த்தரமான வேலையில் இறங்கினார்கள்………
(தொடரும்).